‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு
12/5/2025 3:38:40 PM
அவிநாசி: கோவை மாவட்டம் அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடியும் வரை தேர்தல் வருமா, வராதா என்ற நிலைதான் இருக்கின்றது. இப்போதுகூட உச்சநீதிமன்றம் டிசம்பர் 13ம் தேதிக்குள் உள்ளாட்சி சட்ட நடைமுறைகளை உள்ளடக்கி தேர்தல் தேதியை அறிவிக்க உத்தரவிட்டதால்தான் தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதிலும் கிராம ஊராட்சிகளுக்குத்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான மோசடிகள் செய்ய, தேர்தலைப் பிரித்துப் பிரித்து நடத்துகிறார்கள். எப்படி இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலைச் சந்திப்போம்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் நீதி வழங்கப்படவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. அதையும் முறையாக கொடுப்பதில்லை. கார்பரேட்டுகளுக்கு தவணை, தவணையாக சலுகை வழங்கும் பாரதிய ஜனதா அரசு, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஒழித்துக் கட்டவும் முடிவு செய்துள்ளனர். அதில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8 மாத சம்பளத்தை வழங்காமல் பாக்கி வைத்திருக்கின்றனர். ரூ.7 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள்.
சேலம் உருக்காலை, திருச்சி பெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை ஏலம் விடுகிறார்கள். ராணுவ தளவாடத் தொழிற்சாலைகளை திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை ஆகியவற்றை ஏலம் போடுகிறார்கள். பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி முதலாளிகளுக்கு அதிக சலுகைகள் தருகிறார்கள். நெருக்கடி அதிகரிக்கும்போது, மக்கள் நலத்திட்டங்களை மிகவும் குறைக்கிறார்கள். 70 ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கிய கட்டமைப்பைச் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.வரும் 8ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.