வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை
12/5/2025 3:15:25 PM
சாமியார்மடம்: குமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே கஞ்சிக்குழி தெற்குவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ராஜய்யன் (60). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி ராஜம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகன்களுக்கு திருமணமாகி விட்டது. ஒரு மகனுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான தங்க நகைகளை வீட்டில் ஒரு இடத்தில் புதைத்து வைத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று அனைவரும் குடும்பத்துடன் குமாரகோயிலுக்கு சாமிகும்பிட சென்றனர். அப்போது ராஜய்யனின் மூத்த மருமகள் பிரீத்தாவுக்கு ஒரு போன் வந்தது. உடனே அவசரம் அவரசமாக அவர் வீட்டுக்கு திரும்பினார். மற்ற அனைவரும் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பினர்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் பிரீத்தா கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கப்பட்டு, மிளகாய்பொடி தூவப்பட்ட நிலையில் சத்தம் போட்டு கொண்டிருந்தார். தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மீட்டனர். குடும்பத்தினரிடம் மர்ம நபர்கள் தன்னை தாக்கி விட்டு நகைகளை எடுத்து சென்றுவிட்டதாக கூறினார். இந்த நிலையில் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது புதைத்து வைத்திருந்த 100 பவுன் நகைகளும் மர்நபர்களால் தோண்டி எடுத்து திருடப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக ராஜய்யன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ராஜய்யனின் மூத்த மகன் சுரேஷ்பாபுவின் மனைவி பிரீத்தா. இவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் வேண்டுதலுக்காக அனைவரும் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளனர். கோயிலுக்கு செல்லும் வழியில் பிரீத்தாவுக்கு ஒரு போன் வந்துள்ளது. இதையடுத்து அவர் மட்டும் வீடு திரும்பியுள்ளார். இந்த சமயத்தில்தான் கொள்ளை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பிரீத்தாவிடம் விசாரணை நடத்தினோம்.
அவர் கோயிலுக்கு செல்லும் போது தனக்கு உறவினரிடம் இருந்து போன் வந்தது என்றார். சிறிது நேரம் கழித்து கணவரிடம் இருந்து போன் வந்தது என்று கூறினார். அவர் முன்னுக்கு பின் முரணாக கூறிய தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ராஜய்யனிடம் விசாரித்தோம். அப்போது வீட்டில் இருந்த நகைகள் தனது வீட்டில் உள்ளவர்கள் தவிர யாருக்கும் தெரியாது என்று கூறினார். இதனால் அவர் மீதும் சந்தேகம் வந்ததால் அவரிடமும் விசாரித்தோம். தொடர்ந்து ராஜய்யன், சுரேஷ்பாபு, பிரீத்தா, அவரின் தந்தை, தாய் என்று 5 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.