குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்
12/5/2025 3:13:24 PM
மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் சாமி சிலைகளை கொள்ளையடித்த இளம்பெண் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கேரளாவில் மடக்கிபிடித்து கைது செய்தனர். விசாரணையில் இந்த சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் ஒன்றாக மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி மகாதேவர் ஆலயம் உள்ளது. சிவாலய ஓட்டத்தில் இது 2வது சிவாலயமாகும். மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு பல சிறப்பு தன்மைகள் உள்ளன. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் இங்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி இந்த கோயில் கதவு உடைக்கப்பட்டு கருவறையில் இருந்த சாமி சிலைகள், உண்டியலில் இருந்த காணிக்கை பணம், செம்பால் செய்யப்பட்ட நந்தி, வெள்ளி மற்றும் செம்பால் ஆன திருமுகங்கள், செம்பினால் ஆன திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. புராதனமான கோயிலில் கொள்ளை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்களை கண்காணித்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து வந்து சென்ற ஒரு கும்பல் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று அந்த கும்பலை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷானவாஸ் (35) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். ஷானவாஸ், அவரது நண்பர் உசேன் (36), இவரது கள்ளக்காதலி அமரவிளையை சேர்ந்த இளம்பெண் எஸ்மிதா ஆகியோர் திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் கொள்ளையடித்தது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: உசேனும், எஸ்மிதாவும் கணவன் மனைவி போல் பக்தர்கள் வேடமணிந்து காரில் வந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களை நோட்டமிடுவர். மிக பழமையான கோயில்களில் உள்ள புராதன பொருட்களுக்கு வெளிநாடுகளில் கோடிகணக்கில் மதிப்பு உள்ளது. இதனால் புராதன பொருட்கள் உள்ள கோயில்களை தொடர்ந்து பல நாட்களாக நோட்டமிட்டுவர்.
பாதுகாப்பு குறைவான, கண்காணிப்பு கேமரா இல்லாத கோயில்கள் மற்றும் எளிதாக தப்பி செல்ல வசதி உள்ள கோயிலை தேர்ந்தெடுத்து அங்கு தொடர்ந்து பல நாட்கள் பூஜை செய்வது போல் செல்வர். திக்குறிச்சி மகாதேவர் கோயில் ஆற்றங்கரையில் பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்ததாலும், எளிதாக கேரளா தப்பி சென்றுவிடலாம் என்பதாலும் இந்த கோயிலில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர். அங்கு முதல் முறை கொள்ளையடிக்க முயன்றபோது அவர்களுக்கு உடல் நடுக்கம் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அன்று கொள்ளையடிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு திரும்பியுள்னர். பின்னர் 2வது முறையாக மீண்டும் ஆகஸ்ட் 31ம் தேதி வந்து கொள்ளையடித்துள்ளனர்.
அவர்கள் காரில் வந்து பூட்டை உடைத்து விலை உயர்ந்த பொருட்களை பெயர்த்து எடுத்து காரில் வைத்துக் கொண்டு திருவல்லா சென்றுள்ளனர். அங்குள்ள பாலத்தின் இருந்து மதிப்பு குறைவான பொருட்களை ஆற்றில் வீசியுள்ளனர். பின்னர் விலைமதிப்பு மிக்க சிலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்றுள்ளனர். இந்த சிலைகளை வெளிநாடுக்கு கடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். தற்போது சிலைகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதோடு உசேன் விபத்தில் சிக்கியுள்ளார். மேலும் எஸ்மிதாவுக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலையை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.