சகோதரர்கள் கொலை வழக்கு: தந்தை மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள்
10/10/2025 3:22:22 PM
திருச்சி: சகோதரர்கள் கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்த கீழவங்காரத்தை சேர்ந்த சகோதரர்கள் ஆறுமுகம்(60), திருப்பதி(50). விவசாயிகள். இவர்களது குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (62), இவரது மகன் மதுபாலன்(33), உறவினர் கனகராஜ்(49) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. திருப்பதி மீது தொடரப்பட்ட கொலை வழக்கு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அங்கிருந்து இருப்பிடத்தை காலி செய்து அண்ணன், தம்பி இரு குடும்பத்தினரும் இனாம் சமயபுரத்திற்கு குடிபெயர்ந்தனர். இதற்கிடையில் கடந்தாண்டு மே 27ம் தேதி கீழவங்காரத்தில் உள்ள 3 சென்ட் நிலம் அருகே இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் சகோதரர்கள் இருவரும் வேலி அமைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற துரைராஜ், மதுபாலன், கனகராஜ் ஆகிய 3 பேரும் தகராறில் ஈடுபட்டதோடு, அரிவாள் மற்றும் மண்வெட்டியால் ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி திருப்பதியை வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். இந்த இரட்டை கொலை குறித்து வழக்குப்பதிந்த சிறுகனூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நேற்று நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார். இரட்டை கொலை வழக்கில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பையடுத்து 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.