திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: முக்கிய குற்றவாளி சுரேஷ் செங்கம் கோர்ட்டில் சரண்
10/10/2025 2:34:01 PM
செங்கம்: திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ம் தேதி அதிகாலை சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையர்களின் கைரேகை மற்றும் எந்த தடயங்களும் அங்கு சிக்கவில்லை. கொள்ளை நடந்த இடத்தில் ஒரு ஸ்குரு டிரைவரும், மிளகாய்பொடி காலி பாக்கெட்டும் கிடந்தது. இதைக்கொண்டு போலீசார் துப்பு துலக்கினர். கொள்ளையர்களை பிடிக்க டெல்டா மாவட்டங்களில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருவாரூரில் எஸ்.ஐ. பாரத நேரு தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது ஒரு பைக் வேகமாக வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அந்த பைக்கின் பெட்ரோல் டேங்கில் ஒரு அட்டை பெட்டியும் இருந்தது. இதைபார்த்த போலீசார், பைக்கை நிறுத்தும்படி சமிக்ஞை செய்தனர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதையடுத்து, போலீசார் துரத்தி சென்றனர். இதைபார்த்த பைக்கில் பின்னால் இருந்த வாலிபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். பைக்கை ஓட்டி வந்தவர் பிடிபட்டார்.
விசாரணையில், அவர், திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் என்றும் பைக்கில் இருந்த அட்டைப்பெட்டியில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 4.8 கிலோ எடையுள்ள தங்க, பிளாட்டின நகைகள் இருந்ததும் தெரிந்தது. தப்பி ஓடியவர் சுரேஷ் என்றும், லலிதா ஜூவல்லரி கொள்ளையில் தலைவனாக செயல்பட்ட பிரபல கொள்ளையன் முருகனின் அக்கா மகன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, கொள்ளை கும்பலின் தலைவன் முருகன் மற்றும் சுரேஷின் உறவினர்கள் 20 பேரை பிடித்தனர். அவர்களில் கொள்ளைகும்பல் தலைவன் முருகனின் அக்கா கனகவல்லி மற்றும் உறவினர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் மணிகண்டனையும், கனகவல்லியையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். 20 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் நீதிபதி முன் சரண் அடைந்தார். அவர் காரில் 2 வக்கீல்களுடன் கோர்ட்டுக்கு வந்தார். சுரேஷை திருச்சி போலீசாரிடம் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். சுரேஷை போலீசார் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் தான் இந்த கொள்ளையில் பல திடுக்கிடும் தகவல்களும், கும்பல் தலைவன் முருகன் இருக்கும் இடமும் தெரியும் என்பதால் சுரேஷ் சிக்கியது போலீசாருக்கு ஒரு துருப்பு சீட்டு கிடைத்ததாக கருதப்படுகிறது.