விக்கிரவாண்டி, நாங்குநேரியையும் சேர்த்து 3 தொகுதிகளில் திமுக வெற்றி செய்தி : மு.க.ஸ்டாலின் உறுதி
10/5/2025 2:46:03 PM
சென்னை, - பரணி இ.கார்த்திகேயன் தலைமையில் புதுகோட்டை மாவட்ட அமமுகவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த இயக்கத்துக்கு இருக்கக்கூடிய ஆலயம் எது என்று சொன்னால் அது அண்ணா அறிவாலயம் தான். இந்த அறிவாலயத்தை உருவாக்கியவர் கலைஞர். இந்த கட்டிடத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு செங்கலும் தலைவரால் தேர்வு செய்யப்பட்டு அவரால் உருவாக்கப்பட்ட கட்டிடம். எந்த கட்சிக்கும் இல்லாத சிறப்பு திமுகவுக்கு உண்டு என்று சொன்னால், ஒரு கட்டமைப்போடு இருக்கும் கட்சி என்பதுதான். அதை நெஞ்சை நிமிர்த்தி நம்மால் சொல்ல முடியும். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர போகிறது. தற்போது, 2 தொகுதி இடைத்தேர்தல் வந்திருக்கு. விக்கிரவாண்டியில் திமுக நிற்கிறது. நாங்குநேரியில் கூட்டணி கட்சி காங்கிரஸ் போட்டியிடுகிறது. இரண்டு தொகுதிகளிலும் நமது பணி சிறப்பாக அமைந்திருக்கிறது.
ராதாபுரம் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துள்ளது. 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல். இத்தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். திமுக வேட்பாளர் அப்பாவு கிட்டத்தட்ட இரண்டரை வருடமாக போராடி வழக்கு போட்டு, மீண்டும் எண்ண வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டது. ஏறக்குறைய 17 சுற்றில் அப்பாவு முன்னிலையில் இருக்கிறார். கடைசி 18, 19, 20 ரவுண்ட் எண்ணும் நேரத்தில், தபால் ஓட்டு எண்ணும் நேரத்தில் கலவரத்தை தூண்டி ஒரு அராஜகத்தை ஏற்படுத்தி திமுக ஏஜெண்டுகளை எல்லாம் அடித்த விரட்டி விட்டு, வேட்பாளரான அப்பாவுவையே வெளியே தூக்கி கொண்டு வந்து போட்டு, அவர்களால் ஒரு கணக்கு போட்டு எண்ணி முடித்து அதிமுக வெற்றி என்று சொன்னார்கள்.
தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் ராதாபுரத்திற்கு நியாயம் வழங்கவில்லை. முறையாக தேர்தல் நடந்திருந்தால் இப்போது நாம் தான் ஆட்சியில் இருந்திருப்போம். ஒரு சதவீதத்தில் தான் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது. இன்னும் 10, 12 இடங்களில் வெற்றி பெற்று இருந்தால் திமுக தான் ஆட்சி. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டு பிரதமர் மோடி, அதிமுக ஆட்சி அமைந்த மாதிரியே வாழ்த்து செய்தி அனுப்பியாச்சு. ஆக பிரதமரே வாழ்த்து செய்தி அனுப்பினால், அதிகாரிகள் என்ன ெசய்வார்கள்.
திமுக வெற்றி பெற்றதை தில்லுமுல்லு நடத்தி, 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். இரண்டரை வருடமாக அதிமுக எம்எல்ஏவாக இருந்து கொண்டிருக்கிறார். நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன் என்று தான் அதிமுக உறுப்பினர் சொல்லி இருக்க வேண்டும். எண்ணக்கூடாது என்று உச்சநீதிமன்றத்துக்கு போயிருக்கிறார். தவறு நடந்திருக்கு. அது வெளியே வந்து விட்டால் நாம் எம்எல்ஏ இல்லை. அப்பாவு எம்எல்ஏ. உச்சநீதிமன்றத்துக்கு போய் தடை கேட்டார்கள். உச்சநீதிமன்றம் என்ன சொன்னது. தடை எல்லாம் கொடுக்க முடியாது. அவசர வழக்காக எடுத்து கொள்ள முடியாது என்றது. முறைப்படி தான் எடுத்து கொள்ளுவோம் என்றது.
நேற்று மீண்டும் ராதாபுரம் தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடனே உச்சநீதிமன்றத்துக்கு போய், எண்ணக்கூடாது என்று வழக்கு போட்டார்கள். ஆனால் நீதிமன்றம் நிறுத்த முடியாது. ஓட்டு எண்ணிக்கை முடிவை இப்போது அறிவிக்க மாட்டோம். அதை ஒத்திவைக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் சொன்னது. ஓட்டு எண்ணி முடித்தாச்சு. என்ன நிலவரம் என்று உங்களுக்கு தெரியும். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் அப்பாவு வெற்றி என்று வருகிறது. இதை யாராவது மறுக்கிறார்களா என்றால் இல்லை. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கு ரிசல்ட் வரும் போது 2 தொகுதிக்கு மட்டுமல்ல, ராதாபுரத்திற்கும் சேர்த்து 3 எம்எல்ஏ தொகுதியிலும் திமுக வெற்றி என்ற செய்தி வரும். இது தான் இருக்கக்கூடிய நிலை. இவ்வாறு அவர் பேசினார்.