பொள்ளாச்சியில் தொரட்டி பட நடிகை கண்டுபிடிப்பு: கடத்தவில்லையென வாக்குமூலம்
7/31/2019 3:33:47 PM
பொள்ளாச்சி: தொரட்டி படத்தின் நாயகியும், பொள்ளாச்சியை சேர்ந்த நடிகையுமான மதிசத்தியகலாவை, அவரது குடும்பத்தினர் கடத்தி அடைத்து வைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த ஆட்கொணர்வு மனு கொடுத்துள்ளார். அது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாரிடம் நடிகை, தன்னை யாரும் அடைத்து வைக்கவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.தொரட்டி என்ற தமிழ் படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஷமன்மித்ரு என்பவர் கடந்த 25ம் தேதி மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தபால் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ‘’தொரட்டி படத்தில் கதாநாயகியாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பாலாஜி நகரை சேர்ந்த சேர்ந்த மதிசத்தியகலா நடித்தார். அவருக்கு விருப்பம் இல்லாத திருமணத்திற்கு வற்புறுத்தி, அவரது பெற்றோர் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் கடந்த 22ம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மதிசத்தியகலா கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, மதிசத்தியகலாவை அவரது பெற்றோர் தடுத்து நிறுத்தி, விருப்பத்திற்கு மாறாக வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவது தெரிய வந்தது. எனவே இந்த புகார் மனுவை ஏற்று கொண்டு, மதிசத்தியகலாவை அவரது குடும்பத்தினரின் சட்ட விரோத பிடியில் இருந்து மீட்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் சென்னை உயர் நிதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘’மதி சத்தியகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மகாலிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இதையடுத்து போலீசார் மகாலிங்கபுரம் பாலாஜிநகரில் உள்ள நடிகை மதிசத்தியகலா வீட்டுக்கு சென்றனர். அங்கு மதிசத்தியகலா இருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். நடிகை மதிசத்தியகலாவும் மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் அளித்தார்.
இது பற்றி போலீசார் கூறியதாவது:என்னை யாரும் தனிமையில் அடைத்து வைக்கவில்லை, கடத்தவும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவலாகும். பட தயாரிப்பாளருக்கும் எனக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக நான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு செல்லவில்லை. இது சம்பந்தமாக விரைவில் முழு விளக்கம் அளிப்பேன், என்று மதிசத்தியகலா எங்களிடம் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். இந்த மனு மீதான விசாரணை வரும் 5ம் தேதி நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.