எண்ணூரில் 3 பேருக்கு சரமாரி வெட்டு: 2 ரவுடிகளுக்கு வலை
6/26/2019 4:47:53 PM
திருவொற்றியூர்: சென்னை எண்ணூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டியன் (32). பிரபல ரவுடி. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருவொற்றியூர், சின்ன மேட்டுபாளையத்தை சேர்ந்த யாதவ சங்க தலைவர் பாண்டியமணி, மாட்டு மந்தை தெருவைச் சேர்ந்த கேட் சுப்பிரமணி ஆகியோரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.இதற்கிடையே, பிரபல ரவுடி பாண்டியனை கடந்த 21-ம் தேதி கேட் சுப்பிரமணியனின் உறவினரான திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கங்காதரன், தனது கூட்டாளிகளான மோகன், மோகன்ராஜ், அருண்ராஜ், பிரபாகரன், சரண் ஆகியோருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொன்றார். இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கங்காதரனின் சகோதரரான முருகன் (24) என்பவர் நேற்றிரவு எர்ணாவூர், சுனாமி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு தனது நண்பர்களுடன் நடந்து சென்றார். அப்போது கொலை செய்யப்பட்ட பாண்டியனின் மைத்துனரான தமிழ் (27) மற்றும் அவரது கூட்டாளி ஆகாஷ் (25) ஆகியோர் வழிமறித்தனர்.
பின்னர், எனது மாமா பாண்டியனை கொலை செய்த உன்னை உயிரோடு விடமாட்டேன் எனக் கூறி, முருகன் மற்றும் அவரது நண்பர்களான வினோத் (30), ஹரிகரன் (28) ஆகியோரை தமிழ் மற்றும் ஆகாஷ் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். வெட்டு காயங்களுடன் 3 பேரும் தப்பி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்ததும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு போலீசார் வருவதை பார்த்ததும் தமிழ், ஆகாஷ் ஆகிய இருவரும் தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் போலீசார் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய தமிழ், ஆகாஷ் ஆகிய இருவரையும் வலைவீசி ேதடி வருகின்றனர். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் அடுத்தடுத்து கொலை, கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர்.