பரங்கிமலையில் வேனில் 180 கிலோ கஞ்சா பறிமுதல்
6/26/2019 4:39:20 PM
ஆலந்தூர்: பரங்கிமலை ராணுவ மைதானம் அருகே மர்ம நிலையில் நின்றிருந்த வேனை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த 180 கிலோ கஞ்சாவையும் வேனையும் பறிமுதல் செய்தனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரிக்கின்றனர்.
சென்னை பரங்கிமலை ராணுவ விளையாட்டு மைதானம் அருகே நார்த் பரேடு சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மர்ம நிலையில் ஒரு வேன் நின்று கொண்டிருப்பதாக பரங்கிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் அங்கு ரோந்து பணியில் இருந்த எஸ்ஐகள் குருபரன், உஷா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மர்ம நிலையில் நின்றிருந்த வேனின் மேற்கூரையை உடைத்து பார்த்தனர். அதில் ஒரு அட்டை பெட்டி இருப்பதை கண்டறிந்தனர்.
அந்த பெட்டியை போலீசார் உடைத்து பார்த்தபோது, அதில் கஞ்சா வாடை அடித்துள்ளது. இதையடுத்து அந்த வேனை பரங்கிமலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி முன்னிலையில், வேனின் பூட்டை உடைத்து, அங்கிருந்த அட்டை பெட்டியை உடைத்து சோதனை செய்தனர். அதில் 180 கிலோ கஞ்சா இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். வேனின் நம்பரை வைத்து, இந்த வேனின் உரிமையாளர் யார், கஞ்சா கடத்தியவர்கள் யார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். சமீபகாலமாக பரங்கிமலை, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதேபோல் யாரோ கஞ்சாவை மொத்தமாக கடத்தி வந்து, இப்பகுதிகளில் சில்லறை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கலாம் என பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.