தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’
2/22/2019 2:50:21 PM
* ம.பி, சட்டீஸ்கர், ராஜஸ்தானில் அதிக களையெடுப்பு
* கட்சி தலைமையிடம் ‘ரிப்போர்ட் கார்டு’ சமர்ப்பிப்பு
புதுடெல்லி : தொகுதி மற்றும் மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத, 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு மீண்டும் சீட் கொடுக்க கட்சி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சித் தலைமையிடம் எம்பிக்கள் ‘ரிப்போர்ட் கார்டு’ சமர்பித்துள்ள நிலையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் அதிக களையெடுப்பு நடந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 9 கட்டங்களாக நடைபெற்ற 16வது லோக்சபா தேர்தலில் பாஜ மட்டும் (பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 272) அதிக இடங்களில் வெற்றி பெற்று (282) தனிப்பெரும் கட்சியாக சாதனை படைத்தது. மேலும் இக்கூட்டணி மட்டும் 336 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தம் 62 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி மட்டும் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (336) பாஜ - 282, சிவசேனா - 18, தெலுங்குதேசம் - 16, லோக்ஜனசக்தி - 6, சிரோன்மணி அகாலிதளம் - 4, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி - 3, அப்னாதளம் - 2, பாட்டாளி மக்கள் கட்சி, ஸ்வாபிமான் பக்ஷா, என்.ஆர்.காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களை கைப்பற்றின.
இதில், பாஜ கட்சி மட்டும் ராஜஸ்தான் (25), குஜராத் (26), டெல்லி (7), இமாச்சலப் பிரதேசம் (4), கோவா (2), உத்தரகாண்ட் (5) என 6 மாநிலங்களில் மட்டும் மொத்தமுள்ள 69 தொகுதிகளையும் கைப்பற்றியது. அசாமில் 14ல் 7 தொகுதிகளையும், உத்தரப்பிரதேசத்தில் 80ல் 71 தொகுதிகளையும், பீகாரில் 40ல் 22 தொகுதிகளையும், யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபர், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையு ஆகிய இடங்களில் தலா 1 என 4 தொகுதிகளையும் வென்றது. மற்ற மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, பெரும்பான்மை பலத்தை பெற்றது.
இந்நிலையில், பாஜ கூட்டணியில் இருந்த தெலுங்குதேசம், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகிய கட்சிகள் விலகிய நிலையில், புதிய கூட்டாளியாக அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் பாஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இருந்தும், பாஜ தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த தேர்தலை போலவே, இந்த தேர்தலிலும் பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளது. இருந்தாலும், ஆளும் பாஜ எம்பிக்கள் சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால், அவ்வாறு குற்றச்சாட்டுக்கு ஆளான எம்பிக்களுக்கு மீண்டும் சீட் கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டையும் எடுத்துள்ளது.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜவுடன் முட்டல் மோதலுடன் இருந்த சிவசேனா கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு, 25 இடங்களில் பாஜவும், 23 தொகுதிகளில் சிவசேனாவும் போட்டியிடப் போகின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கும் சேர்த்தே தொகுதி உடன்பாடு செய்துகொண்டுள்ளனர். அதிலும், ஆளுக்குப் பாதியென பிரித்துக்கொண்டுள்ளனர். இருந்தும், இருகட்சிக்கும் இடையே கூட்டணி உறவில் கருத்து வேறுபாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடந்த தேர்தலில் 23 இடங்களை கைப்பற்றிய பாஜ, தனது 5 எம்பிக்களுக்கு (வடகிழக்கு மும்பை, புனே, சோலாபூர், லாட்டூர், அகமத் நகர்) மீண்டும் சீட் கொடுக்க மறுத்துவிட்டது. அதேேபால், மத்திய பிரதேசத்தில், 26 பாஜ எம்பிக்களில் 16 எம்பிக்களுக்கு மீண்டும் சீட் கொடுக்க மறுப்பு தெரிவித்து, அவர்களை ஓரங்கட்டியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் 10 இடங்களை கைப்பற்றிய பாஜ எம்பிக்களில், 6 பேருக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்று தெரிகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களை பாஜ எம்பிக்கள் கைப்பற்றிய நிலையில், அவர்களில் 10 பேருக்கு மீண்டும் சீட் கொடுக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், மேற்கண்ட 3 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பாஜ ஆட்சியை பறிகொடுத்ததால், இந்த தேர்தலில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.
நாடு முழுவதும் பாஜ எம்பிக்களின் செயல்பாடு குறித்து பாஜவின் ஆதரவு அமைப்புகள் தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், ‘பெர்பார்மன்ஸ்’ சரியில்லாத 80 எம்பிக்களுக்கு மீண்டும் சீட் கொடுக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் பாஜ எம்பிக்களின் செயல்பாடு குறித்த ‘ரிப்போர்ட் கார்டு’ கேட்டு 5 புத்தக பிரதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. தொகுதிவாரியாக அவர்கள் செய்த பணிகள் குறித்த விவரங்களை தயார் செய்து, கடந்த 20ம் தேதிக்குள் கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ‘எம்பிக்களின் பணி குறித்த விவரங்கள், மீண்டும் வெற்றி பெறுவதற்கான சூழல், உளவுத் தகவல்கள் ஆகியன குறித்து ஆய்வு செய்த பின்னர்தான், அவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்’ என், பாஜ மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.