பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு ‘திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்: ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தகவல்
2/20/2019 3:45:57 PM
புதுடெல்லி: பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட எதிர்ப்பு கிளம்பி வரும்நிலையில், ‘திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்’ என, ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார். ‘காஷ்மீரில் நடந்த இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் எதிரொலியாக, உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதக்கூடாது’ என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், ‘‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் (ஜூன் 16ம் தேதி) மோதுவதை தவிர்க்க வேண்டும்.
பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே உலக கோப்பையை வெல்லக்கூடிய திறமை இந்திய அணியிடம் இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார். இந்நிலையில் உலக கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், ‘‘ஏற்கனவே திட்டமிட்ட போட்டி அட்டவணையில் மாற்றம் ஏதும் செய்வதற்கான அறிகுறி எதுவும் இல்லை. ஆனால் நிலைமையை எங்களது உறுப்பினர்களுடன் இணைந்து தொடர்ந்து கண்காணிப்போம். மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை கிரிக்கெட் விளையாட்டுக்கு உண்டு’’ என்றார்.