க.காதலியை அபகரித்ததால் வாலிபர் வெறிச்செயல் மர்ம உறுப்பை அறுத்து விவசாயி கொடூர கொலை
2/20/2019 2:37:13 PM
திருப்பத்தூர்: மர்ம உறுப்பை அறுத்து விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏ.கே.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (40). இவர் விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நள்ளிரவு வீட்டில் இருந்து தனது பைக்கில் சென்ற சிவகுமார், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை ஏரிப்பகுதி வழியாக சென்ற சிலர், சிவகுமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவல்படி திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் சிவகுமாரை யாரோ மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டியும், அவரது மர்ம உறுப்பை அறுத்தும் கொலை செய்திருப்பதும் கண்களில் மிளகாய் பொடியை தூவியதும் தெரிய வந்தது.
இதுபற்றி போலீசார் தெரிவித்ததாவது: அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி குட்டியம்மாள்(35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான பழனி என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம், கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் கேரளாவிற்கு சென்று கூலி வேலை செய்து வந்தனர். பின்னர் 6 மாதங்களுக்கு முன்பு குட்டியம்மாள் மட்டும் தனது சொந்த ஊரான ஏ.கே.மோட்டூருக்கு வந்தார். இங்கு சில நாட்கள் தங்கிய நிலையில் குட்டியம்மாளுக்கும் கொலையான சிவகுமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். கேரளாவில் இருந்த பழனி, குட்டியம்மாளை தொடர்பு கொண்டு மீண்டும் கேராளவுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் குட்டியம்மாள் கேரளாவுக்கு செல்வதை மறுத்து அவரிடம் சாக்குபோக்கு சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் குட்டியம்மாள் கள்ளக்காதல் விவகாரம் பழனிக்கு தெரிய வந்தது.
தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வருவதை அறிந்த பழனி கடும் ஆத்திரமடைந்தார். மேலும் கள்ளக்காதலியை அபகரித்த சிவகுமாரை பழிவாங்கவும் திட்டமிட்டதாக தெரிகிறது. இதையடுத்து பழனி ஏ.கே.மோட்டூருக்கு வந்துள்ளார். நள்ளிரவு சிவக்குமார் தனது வீட்டில் இருந்து கள்ளக்காதலி குட்டியம்மாள் வீட்டுக்கு செல்வது பழனிக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் ஏரிப்பகுதியில் மறைந்திருந்தார். நள்ளிரவு பைக்கில் சென்ற சிவகுமாரை பழனி வழிமறித்து மிளகாய் பொடி தூவி கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் அவரது மர்ம உறுப்பையும் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிவிட்ட பழனியை தீவிரமாக தேடி வருகின்றனர்.