உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ஆரம்பம்: முதல் ஆட்டத்தில் ரஷ்யா-சவுதி அரேபியா மோதல்: ஆக்டோபஸ் போய் ‘அசிலிஷ்’
6/14/2018 3:11:50 PM
மாஸ்கோ: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் 21வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது. இன்றைய முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதுகின்றன. உலகக் கோப்பை வரலாற்றிலேயே, உலகத் தரவரிசையில் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் இரண்டு அணிகள் மோதுவது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக போட்டியை நடத்தும் ரஷ்யா, தரவரிசையில் 70வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 67வது இடத்தில் உள்ளது. கடந்த 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன.
போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பைக்கான போட்டி இன்று துவங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதுவதால் பரபரப்பு உண்டாகிறது. சவுதி அரேபியா கால்பந்து அணி இதுவரை 135 ஆட்டங்களில் பங்கேற்றாலும், உலகக் கோப்பையில் பங்கேற்காத ஒசாமா ஹவ்சாவி, மிகச் சிறந்த தடுப்பாட்டக்காரராக உள்ளார். அவரிடமிருந்து அதிரடி ஆட்டத்தை சவுதி அரேபியா எதிர்பார்க்கிறது. அதேபோல் இந்த அணியிலுள்ள மற்ற வீரர்களும் சிறந்த ஆட்டத்தை கொடுப்பார்கள் என்று நம்பி களத்தில் இறங்கியுள்ளனர். ரஷ்ய அணியின் மிகப் பெரிய பலம் அதன் சென்டர் பார்வர்டு பிளேயர் பெடார் ஸ்மோலோவ் மற்றும் அவரைச் சுற்றி ஆடும் 3 பேர்கள்தான். இவர்களது ஒற்றுமையான ஆட்டம், பந்தை பாஸ் செய்வது ஆகியவை ஆட்டம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் கோல் அடிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் போட்டியை நடத்தும் நாடே உலகக் கோப்பையை வென்றது 1998ல் நடந்தது. பிரான்ஸ் அப்போது உலகக் கோப்பையை வென்றது. இதுவரை உலகக் கோப்பையை நடத்திய நாடுகள் குறைந்தபட்சம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளன. கடந்த 2010ல் போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்கா அணி மட்டுமே பிரிவு சுற்று ஆட்டங்களிலேயே வெளியேறியது. தற்போது அதே நிலையில் ரஷ்யா உள்ளது. குறைந்தபட்சம் இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ரஷ்யா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம் என வல்லுநர்கள் ஆருடம் சொல்லி இருப்பதால் ரஷ்யா மிக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் பால் என்ற ஆக்டோபஸை வைத்து எந்த நாடு வெற்றி பெறும் என்று முடிவு செய்தனர். ஆக்டோபஸ் கடந்த முறை துல்லியமாக கணித்தது. ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது. இதனால் மிகுந்த வரவேற்பை பெற்றது.கடந்த முறை ஷாகின் என்கிற ஒட்டகத்தை வைத்து போட்டியின் முடிவைத் தீர்மானித்தனர். இந்தமுறை பூனையை வைத்து போட்டியின் முடிவினை தீர்மானம் செய்கின்றனர்.
இந்தமுறை உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷ்யா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள அந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்துள்ளார். இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ரஷ்யா-சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் ரஷ்யா வெல்லும் என அசிலிஷ் கணித்துள்ளது.