திருவாரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
6/1/2025 3:06:55 PM
திருவாரூர்: திருவாரூரில் இன்று அன்பழகன் தலைமையில் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாள் வரும் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று திமுகவினருக்கு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் தொடக்கமாக ஜூன் 1ம் தேதி (இன்று) திருவாரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு திருவாரூர் வன்மீகபுரத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்கிறார். இதில் திக தலைவர் வீரமணி, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், இந்திய சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா.சற்குணம்,
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி அமைப்பாளர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, பார்வர்டு பிளாக் மாநில பொது செயலாளர் கதிரவன், ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் பொது செயலாளர் திருப்பூர் அல்தாப், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் பி.என்.அம்மாவாசி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகிய 24 கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கருணாநிதியை வாழ்த்தி பேசுகின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12.30 மணியளவில் திருவாரூர் வந்தார். அங்கு கங்களாஞ்சேரியில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் ஸ்டாலின் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எமஎல்ஏ மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் வந்தனர். பின்னர் மாலையில் மு.க.ஸ்டாலின் அம்மையப்பன் என்ற இடத்தில் இயங்கி வரும் பாரத் கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் வன்மீகபுரத்தில் பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். 1 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல், நுழைவு வாயிலில் கம்பீரமான கோட்டை முகப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திருவாரூர் வந்த வண்ணம் உள்ளனர்.