சொகுசு கார் மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தில் சரண்
1/11/2025 3:48:50 PM
சென்னை : சொகுசு கார் மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். சசிகலா கணவர் நடராஜன், கடந்த 1994ம் ஆண்டு லண்டனில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். அந்த கார் 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால், நடராஜன் போலி ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் 1993ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார் என்று கூறி, குறைவான சுங்கவரி செலுத்தி ₹1 கோடியே 65 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளார். இதை அறிந்த சிபிஐ, சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுஜரிதா, உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. வழக்கில் பவானி அப்ரூவராக மாறினார். பாலகிருஷ்ணன் தலைமறைவானார்.
இதையடுத்து, சிபிஐ நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு சசிகலா கணவர் நடராஜன், பாஸ்கரன் உட்பட 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடராஜன், பாஸ்கரன் உட்பட நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 4 பேருக்கும் சிபிஐ நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்து, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே, வழக்கில் இருந்து தங்களுக்கு விளக்களிக்ககோரி நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் தனி, தனியாக உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்தனர். அப்போது, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, தலா ₹25 லட்சம் செலுத்தி, சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுகொள்ளலாம் என்று கூறியிருந்தது.
அதன்படி, சசிகலா கணவர் நடராஜன் சுவாச பாதுகாப்பிற்காக முகத்தில் கருவி அணிந்தபடி இன்று காலை 10.30 மணியளவில் சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்து பணம் செலுத்தியதற்கான ரசீதை தாக்கல் செய்தார். அப்போது, நீதிபதி திருநீலபிரசாத் அவரிடம் பெயர் மற்றும் முகவரிகளை கேட்டார். சுவாச பாதுகாப்பிற்காக முகத்தில் அணிந்திருந்த கருவியை எடுத்து நடராஜன் பதில் கூறினார். இதையடுத்து, நீதிபதி அரை மணி நேரம் காத்திருக்கும் படி கூறினார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நடராஜனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். ஏற்கனவே, கடந்த 3ம் தேதி நீதிபதி, பாஸ்கரனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.