செங்கல்பட்டு அருகே சோகம் பைக் மீது லாரி மோதல் 2 எஸ்ஐ பரிதாப சாவு
12/22/2017 3:35:49 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 எஸ்ஐ பரிதாபமாக இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. எஸ்.ஐ.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் புவனேஸ்வரி (29), காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கணினி பிரிவில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். காஞ்சிபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன் (55). இவர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். கூடுதலாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கணினி பிரிவையும் கவனித்து வந்தார். இவருக்கு தானேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள கணினியில் பழுது ஏற்பட்டால் புவனேஸ்ரியும், வெங்கடேசனும்தான் சரி செய்ய வேண்டும். அந்த வகையில் நேற்று திருப்போரூர் அடுத்த காயார் காவல் நிலையம், மாமல்லபுரம் காவல் நிலையம் ஆகியவற்றில் கணினியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து விட்டு இவர்கள் இருவரும், இரு சக்கர வாகனத்தில் இரவு 9 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பழையசீவரம் சாலையில் சென்றபோது, எதிரே திருமுக்கூடலில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு அதிவேகமாக வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில், புவனேஸ்வரி, வெங்கடேசன் ஆகியோர் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து பாலூர் எஸ்ஐ லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிந்தது. இந்த தகவலை அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் அபிமானி, காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு டிஎஸ்பி மதிவாணன் மற்றும் ஏராளமான போலீசார், மருத்துவமனைக்கு வந்து இருவரது உடல்களையும் பார்வையிட்டனர். இறந்த இரு காவலர்கள் உடல்களுக்கும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான போலீசார் வந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் விஷ்ணு (30) என்பவரை தேடி வருகின்றனர். இவர் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.