வரும் நவம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: செங்கோட்டையன் தகவல்
10/13/2017 3:38:00 PM
கரூர்: பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான அறிவியல், கணிதக் கண்காட்சி, கரூரில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். செங்கோட்டையன் பேசுகையில், ‘மத்திய அரசின் எவ்வித தேர்வுகளையும் சந்தித்து அதில் வெற்றி பெறும் வகையில் தமிழகத்தில் 12 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளது.
3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வரும் நவம்பருக்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். ரூ.483 கோடி மதிப்பில் கணினிமயமாக்கம் நடைபெறும். 2018-19ம் ஆண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கும், 2019-2020ம் ஆண்டில் 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும், 2020-21ம் ஆண்டில் 3, 4 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் 412 மையங்கள் மூலம் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. யோகா மற்றும் விளையாட்டிற்கு 45 நிமிடங்கள் பள்ளி நேரத்தில் ஒதுக்கப்படும்’ என்றார்.