பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை லாரி ஸ்டிரைக்
10/8/2025 5:09:49 PM
* நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் ஓடாது
* அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை முதல் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதால் 93 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 327 சுங்க சாவடிகளை மூட வேண்டும். ஆர்டிஓக்கள் லாரிகளை எந்த வித காரணமும் இன்றி நிறுத்தி அபராதம் வசூலிக்க கூடாது. டீசல் விலை உயர்வை மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். லாரி வாங்கும் போதும், விற்கும் போதும் 28 சதவிகித வரி விதிப்பதை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மத்திய நிதி அமைச்சர், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து கடந்த சில தினங்களுக்கு முன் மனு அளித்தனர். ஆனால், அவர்களது கோரிக்கையை ஏற்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த 4ம் தேதி அறிவித்தனர்.
இதன் பிறகாவது மத்திய அரசு சார்பில் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திட்டமிட்டப்படி நாளை முதல் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழகத்தை பொறுத்தவரை 5 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதனால், தமிழக அரசுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இந்த போராட்டத்தில் அனைத்து லாரிகள் சங்கத்தினரும் கலந்து கொள்கின்றனர். இதனால் காய்கறி வரத்து தடைப்படும். காய்கறி, பழங்கள், பூக்கள், பருப்பு, அரிசி பால், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களும் சரிவர கிடைக்காமல் தடை ஏற்படும். இதனால் சேமிப்பில் உள்ள காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 18ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்துவதால் சரக்கு போக்குவரத்து முற்றிலும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சரக்குப் போக்கு வரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் 50 லட்சம் ஆம்னி பேருந்துகளும் கலந்து கொள்கின்றன. இதனால், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் ஆம்னி பேருந்துகளின் வேலை நிறுத்த போராட்டத்தால் கடும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் கால் டாக்சிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளதால் பயணிகள் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.