சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : ம.பி. முதல்வர் சவுகான் அதிரடி
10/7/2025 2:45:26 PM
போபால்: சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போடும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அண்மைக்காலங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8 வயது சிறுவன் ஒருவர் அந்த பள்ளியில் வேலைபார்த்து வந்த பஸ் கண்டக்டரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டான். கடந்த வாரம் டெல்லி பள்ளி ஒன்றில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாள். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பலாத்கார குற்றத்துக்கான தண்டனை ஆயுளாக அதிகரிக்கப்பட்டது. தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி தலைமையில் நடைபெற்ற பாரத் யாத்ரா பிரசாரத்தில் மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சிறுவர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சிறுவர்களும், சிறுமிகளும் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலும், வீடுகளிலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுவது மிகவும் வெட்கக்கேடான செயல். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நாடு முழுவதும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. சிறுவர், சிறுமிகளை பலாத்காரம் செய்யும் கொடியவர்களை தூக்கில் போட வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் உரிய சட்டதிருத்தம் கொண்டுவரப்படும். இந்த சட்டதிருத்தம் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். அரசுடன் சமூகமும் சேர்ந்த இந்த கொடும் செயலுக்கு எதிராக போராட வேண்டும். குழந்தை தொழிலாளர் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு சவுகான் கூறினார்.