கெஜ்ரிவாலுடன் ஒரே மேடையில் பங்கேற்பு பாஜ நடவடிக்கை எடுத்தால் வரவேற்கிறேன்: யஷ்வந்த் சின்கா மீண்டும் சர்ச்சை பேச்சு
10/6/2025 2:48:38 PM
புதுடெல்லி: கெஜ்ரிவாலுடன் ஒரே மேடையில் கலந்து கொண்டதற்காக பாஜ என் மீது நடவடிக்கை எடுத்தால் அதை நான் வரவேற்கிறேன் என யஷ்வந்த் சின்கா பேச்சு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா அண்மையில் பேசுகையில், நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது என்று பேசினார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைளை விமர்சித்த அவர் அடுத்த கட்டமாக காஷ்மீர் கொள்கையை விமர்சித்தார். போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை சிஆர்பிஎப்பிடம் ஒப்படைத்து விட்டு ராணுவம் வெளியேற வேண்டும் என திரியை கொளுத்தி போட்டார். இது பாஜவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி எழுதிய ஆங்கில புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் யஷ்வந்த் சின்கா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 பேரும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
பின்னர் யஷ்வந்த் சின்கா நிருபர்களிடம் கூறுகையில், மணீஷ் திவாரியுடனும், கெஜ்ரிவாலுடனும் நான் ஒரே மேடையில் பங்கேற்றேன். இதற்காக பாஜ என்மீது நடவடிக்கை எடுத்தால் அதை நான் வரவேற்கிறேன். அந்த நாளை நான் வாழ்வின் மிக சிறந்த நாளாக கருதுவேன். என்னை பிரதமர் மோடி, மகாபாரதத்தில் வரும் சல்யன் என்று விமர்சித்தார். துரியோதனன் பேச்சை கேட்டு பாண்டவர்களிடம் இருந்து கௌரவர்கள் பக்கம் சென்றவர் சல்யன். துரியோதனனால்தான் அவர் கர்ணனுக்கு தேரோட்டியாக ஆனார் என்றும் யஷ்வந்த் சின்கா பதிலடி கொடுத்துள்ளார். யஷ்வந்த் சின்காவின் இந்த கருத்து மீண்டும் பாஜவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.