முதியவர் கொலை:3 கொள்ளையர்கள் கைது
10/5/2025 3:57:32 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). கடந்த 26ம் தேதி இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், கந்தசாமியை கொலை செய்து பீரோவிலிருந்த பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஹட்கோ போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஓசூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் பார்த்தீபன், அவரது நண்பர்கள் சதீஷ்குமார், மஞ்சு ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ``கந்தசாமி வீட்டுக்கு வேலை கேட்டு சென்ற பார்த்தீபன், அவர் தனியாக இருப்பதை அறிந்து, நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 26ம் தேதி இரவு கந்தசாமியின் வீட்டிற்குள் நுழைந்த பார்த்தீபன், சதீஷ்குமார், மஞ்சு ஆகிய மூவரும், நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை தடுக்க முயன்ற கந்தசாமியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பீரோவிலிருந்த 98 பவுன் தங்க நகைகள் மற்றும் ₹1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்`` என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 98 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.