பெரம்பூரில் பரபரப்பு : பெண் டாக்டருக்கு அரிவாள் வெட்டு
10/5/2025 3:51:35 PM
தண்டையார்பேட்டை: பெரம்பூரில் பெண் டாக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெரம்பூர் பட்டேல் ரோட்டை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (39). இவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா (33). டாக்டரான இவர், கோயம்பேட்டில் கிளினிக் நடத்தி வருகிறார். தம்பதிக்கு மூன்றரை வயதில் மகள் உள்ளார். நேற்று இரவு வேலை முடிந்ததும் ரம்யா, காரில் வீட்டுக்கு வந்தார். பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு 2வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, பர்தா அணிந்துவந்த ஒருவர், ரம்யாவை வழிமறித்து தகராறு செய்ததுடன் சரமாரி அரிவாளால் வெட்டினார். இதில் ரம்யா தலை, கழுத்து, முதுகு மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் விழுந்து துடித்தார். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து அந்த நபர் பைக்குடன் தயாராக நின்றுகொண்டிருந்த ஒருவருடன் தப்பிவிட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த ரம்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, பக்கத்து வீடு மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில், ‘’ ரம்யா கிளினிக்கில் வேலை செய்துவந்த தாமஸ் என்பவருக்கும் ரம்யாவுக்கு தகராறு இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இந்த பிரச்னையில் ரம்யா வெட்டப்பட்டாரா, வேறு காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.