கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்: விஷால் பேட்டி
9/15/2017 4:35:44 PM
சென்னை: அரசியலில் குதிக்க முடிவு செய்திருக்கிறார் நடிகர் விஷால். நடிகர் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படம் திரைக்கு வந்துள்ளது. முன்னதாக இணையதளத்தில் புதிய படங்களின் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் இணைய தள எக்ஸ்பர்ட்களை வைத்து திருட்டுவிசிடி ஒளிபரப்புபவர்கள் யார் என்பதை கண்காணித்து வந்தார். இதுகுறித்து ஆதாரங்கள் திரட்டி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்கன் இணைய தள நிர்வாகி கவுரி சங்கரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
விவசாயிகள் பிரச்னை, ஏழை மாணவ மாணவிகள் கல்வி போன்றவற்றுக்கு தனது ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலம் விஷால் வருகிறார். அரசியலில் குதிக்கும் எண்ணத்துடன் அவர் செயல்படுவதாக கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘இந்த விஷயத்தில் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. அதிகாரத்தில் இருந்தால் மக்களுக்கு அதிகமாக நன்மை செய்ய முடியும். கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். நல்லது செய்வதுதான் அரசியல் என்றால் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். இந்த காலத்தில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 4 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று படிக்கின்றனர். இவர்களுக்கு பஸ் வசதி செய்து தந்தால் என்ன குறைந்துவிடப்போகிறது.
ஒரு பக்கம் பணப் பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் சம்பளம் மட்டும் பல மடங்கு உயர்கிறது. உ.பி., மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தமிழகத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யும் கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் அரசு செய்ய மறுக்கிறது. அரசியலுக்கு யார் வந்தாலும் மருத்துவம், கல்வி இரண்டும் இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு விஷால் கூறினார்.