குடிபோதையால் வந்த சோதனை தலையில் கல்லைபோட்டு மகனை கொன்றார் தாய்: திருவேற்காட்டில் பயங்கரம்
9/5/2025 4:08:22 PM
பூந்தமல்லி: திருவேற்காட்டில் தலையில் கல்லை போட்டு மகனை கொலை செய்த தாய், போலீசில் சரணடைந்தார். சென்னை திருவேற்காடு கோலடி பகுதி அன்பு நகர் 1வது தெருவை சேர்ந்தவர் செந்தில் (32). இவர் லாரியில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காமாட்சி (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் செந்திலின் தாய் சரஸ்வதி (61) வசித்து வருகிறார்.செந்தில் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது குடிபோதையில்தான் வருவாராம். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்த தகராறு காரணமாக கோபம் அடைந்த காமாட்சி, அனகாபுத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு 3 பிள்ளைகளுடன் சென்று விட்டார்.
இதன்பிறகு செந்தில் மேலும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் சரஸ்வதியுடன் தகராறு செய்துள்ளார். இது சரஸ்வதிக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. ‘தினமும் குடித்து விட்டு மகன் தகராறு செய்கிறானே, என்ன செய்வதென்றே தெரியவில்லையே’ என்ற விரக்தியில் சரஸ்வதி இருந்திருக்கிறார். இந்நிலையில், நேற்றிரவு இருவருக்கும் கடும் தகராறு நடந்துள்ளது. விரக்தி அடைந்த சரஸ்வதி, இரவில் சாப்பிடாமல் தூங்க சென்றுவிட்டார். இன்று அதிகாலையில் சரஸ்வதி எழுந்தபோது மகன் மீதான ஆத்திரம் தீரவில்லை.
மகன் இருந்தால் மனைவிக்கும் தொந்தரவு நமக்கும் பிரச்னை என்று கருதிய சரஸ்வதி, வீட்டின் அருகே கிடந்த ஒரு பெரிய கல்லை தூக்கிவந்து செந்திலின் தலையில் போட்டுள்ளார். பலத்த காயம் அடைந்த செந்தில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன்பிறகு நேராக திருவேற்காடு காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்த சரஸ்வதி, நடந்த சம்பவம் பற்றி போலீசாரிடம் தெரிவித்தார்.இதையடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து சரஸ்வதியை கைது செய்தனர். குடிபோதையால் மகனையே தாய் கொலை செய்தது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.