காதல் திருமண விவகாரத்தில் பயங்கரம் மாப்பிள்ளையின் தாய் வெட்டி கொலை: பெண்ணின் தம்பி சரண்
9/5/2025 3:50:20 PM
ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் கொடுக்கூரை சேர்ந்த சாமிதுரை மனைவி அஞ்சம்மாள்(40). இவரது மகன் விஜய்(25). அதே கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகள் சங்கீதா(18). விஜயும், சங்கீதாவும் திருப்பூரில் வேலை செய்து வந்தனர். இவர்கள் தூரத்து உறவில் அண்ணன், தங்கை முறையாகும். ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் நெருங்கி பழகினர். அவர்களிடையே காதல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் ஊரில் உள்ள பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். ஆனால், அவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி 10 நாள் முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.சில தினங்களுக்கு முன் சங்கீதாவின் 17 வயது தம்பி போனில் விஜயை தொடர்பு கொண்டு, ‘நமக்குள் என்ன முறை? நீ எப்படி என் அக்காவை திருமணம் செய்து கொண்டாய்’ என கேட்டு இருக்கிறார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் விரோதம் ஏற்பட்டது.
நேற்று மதியம் கொடுக்கூரில் உள்ள முந்திரி காட்டில் அஞ்சம்மாள் விறகு சேகரித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த சங்கீதாவின் தம்பி, அஞ்சம்மாளிடம் ‘விஜய், சங்கீதா எங்கு இருக்கின்றனர்’ என்று கேட்டார். ‘தெரியாது’ என அஞ்சம்மாள் கூறவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சங்கீதாவின் தம்பி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஞ்சம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் அஞ்சம்மாள் அதே இடத்தில் இறந்தார். குவாகம் போலீசில் சங்கீதாவின் தம்பி சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.