லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து தப்பிய திருடன் விபத்தில் சிக்கி சாவு: ஒருவன் படுகாயம்
8/24/2017 5:38:55 PM
ஆவடி: லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து பைக்கில் தப்பிய திருடன் விபத்தில் சிக்கி பலியானான். ஒருவன் படுகாயம் அடைந்தான். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, கச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (31). இவர் லாரி டிரைவர். இன்று அதிகாலை 4 மணியளவில் தாம்பரம்-மாதவரம் 200 அடி பைபாஸ் சாலையில் லாரியில் சென்று கொண்டிருந்தார். அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதி அருகே வந்தபோது, லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பெருமாள் சிறுநீர் கழித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் வந்த 2 பேர் வண்டியை நிறுத்தி, பெருமாளிடம் ‘அவசரமாக ஒருவருக்கு போன் செய்ய வேண்டும்.
தயவு செய்து உங்கள் செல்போனை கொடுங்கள்’’ என்று கேட்டுள்ளனர். அவர் போனை கொடுத்ததும் பேசுவதுபோல் நடித்து செல்போனுடன் இருவரும் பைக்கில் தப்பிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள், செய்வதறியாது திகைத்து நின்றார். இதன்பிறகு லாரியை எடுத்துக்கொண்டு பெருமாள் சென்றார். கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் நடுவே சென்டர்மீடியனில் பைக் மோதி 2 பேர் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தனர். பெருமாள் லாரியை நிறுத்தி பார்த்தபோது தன்னிடம் செல்போன் பறித்து தப்பியவர்கள் என்று தெரிந்தது. இருப்பினும் பெருமாள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். விசாரணையில், இறந்தவர் அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம், இந்திரா நகர், காமராஜர் தெருவை சேர்ந்த மணி (20) என்பதும் படுகாயம் அடைந்தவர் கோரை தெருவை சேர்ந்த சூர்யா (20) என்பதும் தெரிந்தது. மணியின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்யா சிகிச்சை பெற்று வருகின்றார். பெருமாள் செல்போனை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.