பீகாரில் வருகிற 27ம் தேதியன்று லாலு நடத்தும் பேரணி: சோனியா, மாயாவதி புறக்கணிப்பு
8/24/2017 3:33:46 PM
பாட்னா: பாஜவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து லாலு பிரசாத் நடத்தும் பிரமாண்ட பேரணியில் சோனியா காந்தி, மாயாவதி ஆகியோர் பங்கேற்கவில்லை. பீகாரில் லாலுவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட முதல்வர் நிதிஷ்குமார் பாஜவுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கும் முனைப்பில் லாலு பிரசாத் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, வருகிற 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் வகையிலான பிரமாண்ட பேரணிக்கு லாலு ஏற்பாடு செய்துள்ளார்.
வருகிற 27ம் தேதியன்று தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள இந்த பேரணியில் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் இந்த பேரணியில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பகுஜன் சமாஜ் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் சதிஷ் சந்திரா மிஷ்ரா பங்கேற்கின்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமாருக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பீகாரில் தற்போது கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று பீகார் மாநில துணை முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான சுசில் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாலு பிரசாத், பேரணி நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக பிரதமர் மோடி இங்கு வந்து வெள்ளப்பாதிப்பை பார்வையிடுவது ஏன்? என்றார். மேலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது மோடி ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.