பீகாரில் மழை வெள்ளம் பலி எண்ணிக்கை 367 ஆனது: அசாம், உ.பி., மே.வங்கத்திலும் கடும் பாதிப்பு
8/24/2017 3:23:25 PM
பாட்னா: பீகார் மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி நேற்று மட்டும் 26 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து அந்த மாநிலத்தில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. இதே போல அசாம், உ.பி. மற்றும் மே.வங்கமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கும் வெள்ள பலி அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பீகார் மாநிலம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 19 மாவட்டங்களில் சுமார் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 26 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து இந்த மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் வெள்ள சேதங்களை பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை ஆய்வு செய்ய உள்ளார். இதன் பின்னர் இந்த மாநிலத்துக்கான மத்திய அரசின் நிவாரண உதவி குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல உத்தரபிரதேசத்திலும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேபாளத்திலிருந்து பாய்ந்தோடி வரும் நதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் பல மாவட்டங்கள் நீரில் தத்தளிக்கின்றன.
இந்த மாநிலத்தில் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர். 2800 கிராமங்களை சேர்ந்த 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ன.
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். மே.வங்கமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மால்டா மாவட்டத்தில் நிலைமை இன்னும் சீராகவில்லை. சில பகுதிகளில் மட்டும் ெவள்ள நீர் வடிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.