கோவை பேராசிரியை கொலை: நகை தர மறுத்ததால் மனைவியை கழுத்து நெரித்து கொன்றேன் கணவர் பரபரப்பு வாக்குமூலம்
8/23/2017 4:15:30 PM
கோபி: தொழில் செய்ய நகையை தர மறுத்ததால் மனைவியை கழுத்து நெரித்து கொன்றதாக கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோபி அருகே உள்ள நம்பியூரை சேர்ந்த சென்னியப்பன் மகள் மஞ்சுளா(26). எம்.இ முடித்துள்ள மஞ்சுளா கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்தார். நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் ஆயிபாளையத்தை சேர்ந்தஅய்யாசாமி மகன் லிங்கேஷ்வரன்(28). எம்.இ.,முடித்துள்ள இவர் கோவையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்தார். மஞ்சுளாவும், லிங்கேஷ்வரனும் கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பத்து மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் மஞ்சுளா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து மஞ்சுளாவின் தாயார் தவமணி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கோபி கோட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் கோபி டி.எஸ்.பி.செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து மஞ்சுளாவின் கணவர் லிங்கேஷ்வரன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் லிங்கேஷ்வரன் குருமந்தூர் வி.ஏ.ஓ., ராம்ஜியிடம் நேற்றுமுன்தினம் சரணடைந்தார். அவரை கடத்தூர் போலீசாரிடம் வி.ஏ.ஓ., ஒப்படைத்தார். லிங்கேஷ்வரனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
லிங்கேஷ்வரன் அளித்த வாக்குமூலம்: திருமணமான சில மாதத்தில் இருந்தே எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்துவந்தது.இதனால், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் போதிய வருமானம் இல்லாததால் போர்வெல் வண்டி வாங்கி தொழில் செய்ய நினைத்தேன். இதற்காக மனைவியின் நகையை கேட்டேன். ஆனால் அவர் நகையை தர மறுத்துவிட்டார். மேலும் நகையை பெற்றோர் வீட்டில் வைத்துவிட்டார். சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் அயர்ன் பாக்ஸ் வயரால் மஞ்சுளா கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டேன். கொலையை மறைக்க தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அனைவரிடமும் கூறினேன். ஆனால் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். எனவே சரண் அடைந்தேன்.