கொன்றுவிடுவதாக மிரட்டியதால் கணவர் தற்கொலை: மனைவி, கள்ளக்காதலன் கைது
8/23/2017 3:52:06 PM
தாம்பரம்: சென்னை தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் பூங்கா தெருவை சேர்ந்தவர் ராஜன் (31). இவர் விஜயநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றினார். இவரது மனைவி சீதாலட்சுமி (29). இவர்களுக்கு ஸ்ருதிமதி (6) என்ற மகளும் வினித் (5) என்ற மகனும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை ராஜனின் பெற்றோர், அவரது அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ராஜன் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அருகில் உள்ள வீட்டுக்காரர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ராஜன், மின்விசிறியில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜன் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தனது தற்கொலைக்கு காரணம் மனைவி சீதாலட்சுமி, அவரது கள்ளக்காதலன் ஐவர் ராஜ் என்று எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் சீதாலட்சுமியை அழைத்து விசாரித்தனர். இதில் சீதாலட்சுமிக்கும் சந்தோஷபுரம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்திவரும் ஐவர் ராஜ் (27) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவ்விஷயம் ராஜனுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெரியவந்ததால் சீதாலட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சீதாலட்சுமி தனது குழந்தைகளை ராஜனிடம் விட்டுவிட்டு ஒரு மாதத்துக்கு முன் பனையூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன்பிறகு ராஜன் தொடர்ந்து சீதாலட்சுமிக்கு செல்போனில் அழைத்து குடும்பம் நடத்த வருமாறு கேட்டபோது மறுத்துவிட்டார். அத்துடன் காதலன் ஐவர் ராஜுடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராஜன், சீதாலட்சுமியை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழும்படி கேட்டுள்ளார். அதற்கு சீதாலட்சுமி, ‘’உன்னுடன் வாழ எனக்கு விருப்பம் இல்லை. ஐவர் ராஜுடன்தான் வாழப்போகிறேன்’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராஜன் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து ஐவர் ராஜை போலீசார் அழைத்து விசாரித்தபோது, அவர் சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (25) என்பவரை காதலித்து கடந்த 2013ம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளார். பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து கேட்டு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த வருடம் பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த லட்சுமி (22) என்ற பெண்ணை காதலித்து வந்தபோது லட்சுமியின் பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்பிறகு இருவருக்கும் பிரிவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சீதாலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது சீதாலட்சுமியின் கணவர் ராஜனுக்கு தெரியவர சீதாலட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் சீதாலட்சுமியும் ஐவர் ராஜும் சேர்ந்து ராஜனை மிரட்டியதால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதையடுத்து சீதாலட்சுமி, ஐவர்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.