காக்களூர் ஸ்ரீகாரணீஸ்வரர் கோயிலில் 108 பால்குட அபிஷேகம்
8/16/2017 4:15:59 PM
திருவள்ளூர்: காக்களூர் ஸ்ரீகாரணீஸ்வரர் கோயிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று 108 பால் குட அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஸ்ரீசெண்பகவல்லி சமேத காரணீஸ்வரர் கோயில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் மூலவரின் திருமேனியை சித்தர்கள் ஸ்தாபித்து உள்ளனர். கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற இக்கோயிலில், மூலவர் சிவலிங்கம் மீது நாகம் ஒன்று தோன்றி 3 முறை காட்சி அளித்துள்ளது. நாகம் படம் எடுத்து ஆடுகின்ற காட்சியை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்துள்ளனர்.
இக்கோயிலில் உள்ள வள்ளி, தெ ய்வானை சமேத முருகருக்கு ஆடி கிருத்திகையான நேற்று 108 பால் குட அபிஷேகம் நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார் செல்வகணபதி தலைமையில் மூங்காத்தம்மன் கோயிலில் இருந்து பால் குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காரணீஸ்வரர் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காரணீஸ்வரர் இறைபணி மன்றம் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.