ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை: மத்திய அரசு முடிவு
8/14/2017 6:16:44 PM
மும்பை: பயணிகள் நலன் கருதி, ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, கிழக்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 10 நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது. ரயில்வே நிலையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும், சிறந்த முறையில் பராமரிக்கவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ரயிலில் பயணம் மேற்கொள்வோர் உடல்நலனை கருத்தில் கொண்டு மிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கிழக்கு ரயில்வேக்கு சொந்தமான 10 ரயில் நிலையங்களில் செயல்பட உள்ள இதற்கு, ‘ஒரு ரூபாய் கிளினிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது மருத்துவரின் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும். ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக செய்வதுடன், சர்க்கரை பரிசோதனைக்கு ரூ.25 வசூலிக்கப்படும். இசிஜி ரூ.50ல் எடுக்கலாம். இதுபோன்று குறைந்த கட்டணத்தில் பரிசோதனை, சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த கிளினிக்குகள் இயங்கவுள்ளன. தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது இந்த கிளினிக்கில் கட்டணம் மிகமிக குறைவு.
முதல்கட்டமாக 10 ரயில் நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் இயங்கும். இதைத்தொடர்ந்து, மேற்கு ரயில்வேயின் கீழ் செயல்படும் 24 ரயில் நிலையங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 10ம் தேதியன்று, மும்பையில் உள்ள காத்கோபர் ரயில் நிலையத்தில், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் கிளினிக் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.