வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
8/14/2017 6:14:17 PM
மும்பை: வந்தே மாதரத்தை தேசிய பாடலாக அறிவித்து அதை கட்டாயமாக பாட வகை செய்யும் வகையில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் வந்தே மாதரம் குறித்த பாஜ மற்றும் இந்துத்துவ தலைவர்களின் பேச்சு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. அனைத்து தரப்பினரும் தேசிய பாடலான வந்தே மாதரத்தை பாட வேண்டும் என பாஜ தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் வந்தே மாதரத்தை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் உருவாக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் கலந்து கொண்டு பேசுகையில், வந்தே மாதரம் பாடலை வைத்து அரசியல் சர்ச்சைகளை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். மாறாக அதை அனைவரும் கட்டாயம் பாட வகை செய்யும் வகையில் சட்டம் உருவாக்க வேண்டும். பொது மக்கள் அனைவரும் தினமும் வந்தே மாதரத்தை பாட வேண்டும். அதை செய்ய தவறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
வந்தே மாதரத்தை பாட தேவையில்லை என சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வரும் அமைச்சர்களை நீக்க பாஜ தயாரா? வந்தே மாதரம் பாடாதவர்களை பாஜ நீக்குமா? எனவே இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை விட்டு விட்டு வந்தே மாதரத்தை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றார். ஏற்கனவே மும்பை மாநகராட்சி மேயர் விஷ்யநாத் மகாதேஷ்வர் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், மும்பையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளும் வாரம் இருமுறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.