இலங்கை கடற்படை அட்டூழியம்: வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு
8/14/2017 3:31:25 PM
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீன்பிடி தளத்திலிருந்து நேற்று மதியம் சுமார் 50 விசைபடகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று நள்ளிரவு 1மணி அளவில் கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். அச்சமடைந்த மீனவர்கள் படகுகளை கரை நோக்கி திருப்பி வந்தனர். ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த கபிலன் என்பவருக்கு சொந்தமான படகை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து அதிலிருந்த உரிமையாளர் கபிலன், மீனவர்கள் தேவதாஸ், ராமசாமி, கோவிந்தசாமி ஆகிய 4 பேரையும் சிறைபிடித்து சென்றனர்.
படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மீனவர்கள் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சக மீனவர்கள் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படை குழுமத்தில் புகார் தெரிவித்தனர். இலங்கை கடற்படை அட்டூழியத்தால் மீனவர்கள் மீன்பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர். இதனால் பெரு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.