காவல் பதக்கம் பெறுவோர், தீயணைப்பு வீரர்களுக்கு படி உயர்வு உள்பட 54 அறிவிப்புகள்
7/8/2025 3:34:36 PM
சென்னை : காவல்துறையில் பல்வேறு பதக்கங்களை பெறுவோருக்கான படிகளையும், தீயணைப்புத்துறையில் பணியாற்றுவோருக்கு இடர்படிகளையும் உயர்த்துவது உள்பட 54 அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று வெளியிட்டார். காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு: கோயம்புத்தூர் மாவட்டம், தடாகத்தில் புதிய காவல் நிலையம் 2.64 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். சுல்தான்பேட்டையில் புதிய காவல் நிலையம் 1.52 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். சேலம் மாவட்டத்தில் ஏத்தாப்பூர் காவல் நிலையம் மற்றும் கருமந்துரை காவல் வட்டங்கள், 7.8 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் காவல் நிலையத்தை ஊரகம் மற்றும் நகரம் என இரண்டாகப் பிரித்து ஆத்தூர் நகர காவல் நிலையம், 2.57 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். சேலம் மாநகரம், கருப்பூரில் புதிய காவல் நிலையம் 1.52 கோடிரூபாய் செலவில் உருவாக்கப்படும். நாமக்கல் மாவட்டம், வெப்படையில் புதிய காவல் நிலையம் 1.52 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள கோபிநத்தத்தில் புதிய காவல் நிலையம் 2.64 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். தமிழ்நாடு காவல் துறையினருக்காக சைபர் அரங்கம் ஒன்று 3.71 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரைத் தண்டிக்க மின் ரசீது முறை, 6.42 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும்.
வீரதீரச் செயலுக்காக, தமிழக முதல்வரின் காவல் பதக்கம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பணப்படி 300 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக உயர்த்தப்படும். இதற்காக 9 இலட்சம் ரூபாய் செலவிடப்படும். காவலர் பதக்கம் பெற்றவர்களுக்கு, மாதாந்திர பதக்கப்படி 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படும். இதற்காக 54 இலட்சம் ரூபாய் செலவிடப்படும். காவல்துறையினரின் மெச்சத்தக்க பணிக்காக வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் வெகுமதியுடன் கூடிய ரொக்கத் தொகையை காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், சார்பு ஆய்வாளர் முதல் காவல் ஆய்வாளர் வரை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் தலைமைக் காவலர் வரை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும். இதற்காக 9 இலட்சம் ரூபாய் செலவிடப்படும்.
தொழில்நுட்ப மற்றும் சிறப்புச் சேவையில் சிறந்து விளங்கியோருக்கான, தமிழ்நாடு முதலமைச்சரின் வெகுமதியுடன் கூடிய ரொக்கத் தொகை உயர்த்தப்படும்.
சென்னை பெருநகர காவல் துறைக்குட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில், தமிழ்நாடு காவலர் சிறப்பு அங்காடி, 8 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். சென்னை பெருநகரம், ஐஸ்அவுஸிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், து-2 கானாத்தூர் காவல் நிலையம், கூ-9 பட்டாபிராம் காவல் நிலையம் உட்பட 11 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் 11.37 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களுக்கு, அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடும் போது ஏற்படும் எதிர்பாரா பெருந்தீக்காயங்கள் மற்றும் கொடுங்காயங்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சை மேற்கொள்ள அதற்கான செலவினத்தை ஈடுசெய்யும் வகையில் தனியாக ‘எதிர்பாரா மருத்துவ நல நிதி’ஒன்றை உருவாக்கி, அந்த மருத்துவ நல நிதிக்கு ஆண்டு தோறும் 50 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சவால் நிறைந்த தீ விபத்து, இயற்கை இடர்பாடுகள் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத இடர்படி தீயணைப்பாளர் முதல் உதவி மாவட்ட அலுவலர் வரையிலான பணியாளர்களுக்கு 400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாகவும்; மாவட்ட அலுவலர்களுக்கு 450 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.