அசாமில் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிப்பு
7/6/2025 3:56:04 PM
கவுகாத்தி: அசாமில் கனமழைக்கு 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அசாம் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. இங்குள்ள லட்சுமிபூர், ஜோர்கத், கோலாகட், சோனிட்பூர், நாகோன் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கனமழையால் சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் மாநில அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 128 முகாம்கள் அமைக்கப்பட்டு, அவைகளில் 41,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடைகள் வழங்கப்பட்டன. தொற்றுநோய் பரவாமல் தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்கள் சேதமடைந்தன. ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. முக்கிய நதியான பிரம்மபுத்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிப்போர் வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.