போலீஸ் வாகனத்திலேயே நடந்த துணிகர சம்பவம் தேக்கு மரம் கடத்திய 2 போலீசார் கைது: உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு?
7/3/2025 3:06:01 PM
திருப்பத்தூர்: ஏலகிரிமலையில் தேக்குமரங்களை வெட்டி போலீஸ் வாகனத்தில் கடத்த முயன்ற 2 போலீஸ்காரர்கள் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலீஸ் வாகனம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது ஏலகிரிமலை. சுற்றுலா தலமான இந்த மலையில் உள்ள காப்புக்காட்டில் உயர்தரமான தேக்கு, சந்தனம் உள்பட பல்வேறு உயர் இன மரங்கள் வளர்க்கப்பட்டன. அடர்ந்த எழில்சூழ்ந்த இங்கு மான், கரடி, காட்டெருமைகள் போன்ற வன விலங்குகளும் அதிகளவில் வசித்தன. ஆனால் தகுந்த பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாததால் நாளடையில் சமூகவிரோதிகளின் செயல்களால் உயர் ரக மரங்களும், காட்டுவிலங்குகளும் அதிகளவில் அழிந்து போனது. குறிப்பாக சந்தன மரங்களை சமூகவிரோதிகள் அதிகளவு வெட்டி கடத்திச்சென்றுவிட்டனர். தற்போது காப்புக்காட்டில் தேக்கு, வேம்பு, பலா மற்றும் காட்டுவகை மரங்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் ஏலகிரிமலையில் உள்ள நாகனூத்து காப்புக்காட்டில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் போலீசாரின் டிரக் வாகனம் ஒன்று சந்தேகப்படும்படி சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். சந்தேகமடைந்த அவர்கள், இதுகுறித்து திருப்பத்தூர் உதவி வனப்பாதுகாவலர் முகமதுரபிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் முகமதுரபி மற்றும் வனச்சரகர் பரமசிவம், வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், பரந்தாமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த 2 பேர், சுமார் 2 டன் எடை கொண்ட 2 தேக்கு மரங்களை மெஷினால் அறுத்து தயாராக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஏலகிரிமலை நிலாவூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(28) என்பதும், இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள 7வது பட்டாலியன் ஆயுதப்படை பயிற்சி முகாமில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும், மற்றொருவர், இவருடன் பணிபுரியும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த தம்பிதுரை(27) என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் தேக்குமரங்களை வெட்டி போலீஸ் வாகனத்தில் கடத்த முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் வாகனத்துடன் தேக்குமரங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், மரத்தை கடத்த முயன்ற போலீஸ்காரர்கள் வேல்முருகன், தம்பிதுரை ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பத்தூரில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தேக்குமரத்தின் மதிப்பு சுமார் ₹1 லட்சம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் போச்சம்பள்ளியில் உள்ள பட்டாலியன் பயிற்சி முகாமில் விசாரித்தபோது, இந்த டிரக் வாகனத்தை சந்தையில் மளிகை பொருட்கள் வாங்கவும், பாதுகாப்பு பணிக்காகவும் போலீஸ்காரர்களை அனுப்பி வைக்க பயன்படுத்துவதும், போச்சம்பள்ளியில் நேற்று வாரச்சந்தை என்பதால் மளிகை பொருட்களை வாங்கி வர இந்த வாகனத்தை வேல்முருகன், தம்பிதுரை இருவரும் எடுத்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த தேக்குமரக் கடத்தலில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. உயர் அதிகாரிகளின் ஆசீர்வாதம் இன்றி தேக்குமரக் கடத்தலில் போலீஸ்காரர்கள் ஈடுபட்டிருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. போலீஸ் வாகனத்தை எங்கு எடுத்துச் செல்கிறார்கள்; எத்தனை மணிநேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டியது உயர் அதிகாரிகளின் பொறுப்பாகும். அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது இந்த சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.