ஜிஎஸ்டி வரியை குறைக்கக் கோரி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டம்
6/30/2017 3:35:27 PM
கோவில்பட்டி : ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் பகுதிநேர இயந்திர தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதில் பகுதிநேர இயந்திரம் மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பால் தமிழகத்தில் இயங்கும் 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பகுதிநேர இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். செயலாளர் சேதுரத்தினம் வரவேற்றார். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிறுவனத் தலைவர் ராஜவேல், துணை தலைவர் ராஜ் முன்னிலை வகித்தனர். பகுதிநேர இயந்திர தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை(1ம் தேதி) முதல் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அடைத்து காலவரையற்ற போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. வருகிற ஜூலை 3ம் தேதி மாலை 3 மணிக்கு கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பேரணி நடத்துவது, 4ம் தேதி முதல் மத்திய கலால் வரி அலுவலகம் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை தினமும் 500 பேர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் வருகிற 10ம் தேதி கோவில்பட்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.