ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம்
6/30/2017 3:22:35 PM
நாமக்கல் : ஜிஎஸ்டி எதிரொலியாக, நாமக்கல் பகுதியில் 40 ஆண்டு கால முட்டை விலை நிர்ணய முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி வாரம் 3 நாட்களுக்கு, முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின், விலை நிர்ணய ஆலோசனை குழு கூட்டம், தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் செல்வராஜ் அளித்த பேட்டி: நாளை முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வர உள்ளது. எனவே, முட்டை விற்பனைக்கு, இனி அனைவரும் பில் போட வேண்டியது அவசியமாகிறது.
இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த யூக அடிப்படையிலான விற்பனையை, இனி நடைமுறைப்படுத்த முடியாது. தற்போது மதியம் அறிவிக்கும் விலை, அன்று முழுவதும் விற்பனை செய்யப்படும் முட்டைக்கு பொருந்தும். இனி அதற்கு பதிலாக வாரந்தோறும் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு அடுத்து வரும் நாட்களுக்கான விலை அறிவிக்கப்படும் என்றார். நாமக்கல்லில் கோழிப்பண்ணை தொழில் தொடங்கி கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில், தற்போது ஜிஎஸ்டி அமலுக்கு வர உள்ளதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.