சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் அரைகுறை பாலங்களால் போக்குவரத்து திணறல்
6/30/2017 3:14:55 PM
சென்னை மாநகரிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல்வேறு பாலப் பணிகள் ஜரூராக துவங்கியதோடு சரி. அதன்பிறகு அப்பாலப் பணிகள் அனைத்தும் முற்றுப்பெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரும் தள்ளாட்டத்துடன் திணறி வருகின்றன. இதையடுத்து மாநகர பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பயணிப்பவர்கள், குறித்த நேரத்தில் உரிய இடத்துக்கு செல்ல முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, சென்னை வேளச்சேரி பைபாஸ் சாலையின் நடுவே மேம்பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் ஜரூராக நடைபெற்றன. சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு, தடுப்புகள் வைத்து அள்ளிய களிமண் மலையாக குவிக்கப்பட்டது. இதனால் 100 அடியாக இருந்த பைபாஸ் சாலை, தற்போது அந்த சாலையின் இருபக்கமும் 40 அடியாக சுருங்கிவிட்டது. இதையடுத்து, அப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலை, மாலை என எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. அவ்வழியாக செல்லும் மாநகர பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஜிக்ஜாக் முறையில் ஆங்காங்கே பிரேக் அடித்தபடி திணறலுடன் சென்று வருகின்றன. எனினும், அப்பாலப் பணிகள் இன்றுவரை நிறைவு பெறவில்லை. அப்பாலத்தை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.
பெரும்பாலான ஐடி நிறுவன மக்கள் வசிக்கும் காஸ்ட்லி பகுதியாக மக்களிடையே வேளச்சேரி கருதப்பட்டாலும், இதுபோன்ற நிலுவை சாலை மற்றும் பாலப் பணிகளால் அனைத்தையும் இழந்த கைம்பெண் நிலையில் உள்ள பகுதியாகவே மாறிவிட்டது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னைக்கு அருகே பூந்தமல்லி, வேலப்பன்சாவடி பகுதியில் இருந்து திருவேற்காடு செல்வதற்கு முன்பொரு காலத்தில் தரைப்பாலம் இருந்தது. மழைக் காலங்களில் இப்பாலத்துக்கு மேல் தண்ணீர் ஓடியதால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த தரைப் பாலம் உயர்த்தப்பட்ட நிலையில் புதிய பாலம் கட்டப்பட்டும் இதுவரை பக்கவாட்டு சுவர்கள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவுநேரங்களில் அவ்வழியாக இருபக்கமும் செல்லும் மாநகர பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் திணறியபடிதான் சென்று வருகின்றன. இப்பாலத்தில் இதுவரை தடுப்பு சுவர் அமைத்து, சாலையோர மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை என திருவேற்காடு பகுதி மக்கள் கூறுகின்றனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள பாண்டூர்-இடையாத்தூர் கிராமங்களுக்கு இடையே இருந்த மிகப் பழமையான தரைப்பாலம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையில் வெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்டது.
பின்னர் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஓராண்டுக்கு முன் இங்கு பல லட்சம் செலவில் புதிதாக உயர்த்தப்பட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. எனினும், பாலத்தின் இருபக்கமும் இணைப்பு சாலைகளை அமைக்காமல் அப்பணிகளை இன்றுவரை அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இதனால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டால், இடையாத்தூர் கிராமத்துக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டு வருகிறது என்று அக்கிராம மக்கள் கண்ணீருடன் கூறுகின்றனர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு பாலப் பணிகள் துவக்கத்தின்போது ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது. அதன்பிறகு அப்பணிகளை தொடர தமிழக அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை. இதனால் அப்பணிகள் அனைத்தும் அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன. பின்னர் ஒருசில ஆண்டுகள் கழித்து அப்பணிகளை துவக்கும்போது பல்வேறு கட்டிடப் பொருட்களின் அதிகபட்ச விலை உயர்வால் ஒப்பந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற பல்வேறு தடங்கல்களினால் அப்பாலப் பணிகள் அனைத்தும் நீண்ட காலமாக இழுபறியாகவே நீடித்து வருகிறது’ என்று அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள பாலப் பணிகளுக்கு இனியாவது விடிவுகாலம் கிடைக்குமா?