இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் டிஜிபி ராஜேந்திரனுக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு : தமிழக அரசு உத்தரவு
6/30/2017 3:13:47 PM
சென்னை : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று மாலையுடன் ஓய்வுெபறும் நிலையில் அவருக்கு தமிழக அரசு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக கடந்த ஆகஸ்ட் மாதம் டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. புதிய டிஜிபியாக யார் வருவார்கள் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் டிஜிபி அலுவலகத்தில் இருந்து டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழக உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதுகுறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், தமிழக பிரிவில் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், சிவில் சப்ளை டிஜிபி ராதாகிருஷ்ணன், காவலர் பயிற்சி பள்ளி இயக்குநர் மகேந்திரன், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஜாங்கிட், சட்டம் ஒழுங்கு திரிபாதி ஆகியோர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தேர்வாணையம் நேற்று அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து தமிழக அரசின் தலைமை செயலாளர், டி.கே.ராஜேந்திரனை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து, 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்குவதற்கான உத்தரவுடன் மும்பை சென்றார். இன்று காலை தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து அவரிடம் முறைப்படி பணி நீட்டிப்புக்கான அனுமதி பெற்றார்.
அதை தொடர்ந்து டி.கே.ராஜேந்திரனை இரண்டு ஆண்டுகள் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு இன்று காலை உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற விதிப்படி, மாநில அரசின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் 2 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும் என்பதால், தமிழக அரசு ஒரு சிறப்பு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையின் படி, டிஜிபியாக ஓய்வு பெறும் நாளில் ராமானுஜத்துக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவரை தொடர்ந்து அசோக் குமார் அந்த சிறப்பு உத்தரவின்படி 2 ஆண்டுகள் பணி அமர்த்தப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் தமிழக அரசு வற்புறுத்தலின்பேரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசோக்குமார் விருப்ப ஓய்வு பெற்று சென்றார்.
அதைதொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி.கே.ராஜேந்திரன் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் பொறுப்பை கவனித்து வந்தார். இந்த நிலையில், அவர் இன்று ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் டி.கே.ராஜேந்திரனுக்கு புதிய டிஜிபியாக பணி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குட்கா விவகாரம் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில் டி.கே.ராஜேந்திரனுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.