வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
6/29/2017 3:36:44 PM
சென்னை : வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கோவை, நீலகரி, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ச்சியாக கனமழை கொட்டி வருகிறது.இதனால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் பாபநாசம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பருவமழை முறையாக பெய்வதால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னகலார் 13 செ.மீ, வால்பாறை 10 செ.மீ, பாபநாசம், குளச்சல், பெரியாறு (தேனி) தலா 5 செ.மீ, குழித்துறை, தக்கலை தலா 4 செ.மீ, செங்கோட்டை (நெல்லை), நாகர்கோவில், பேச்சிப்பாறை, பூதபாண்டி பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவானது. தென்காசி, பொள்ளாச்சி, திருப்பத்தூர், மணிமுத்தாறு தலா 2 செ.மீ மழை பதிவானது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தற்போது கேரளாவில் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வெப்பச் சலனத்தால் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.