சென்டாக் ஆபீசில் சிபிஐ அதிரடி ரெய்டு : புதுவை அரசு அதிகாரிகள் கலக்கம்
6/28/2017 3:59:45 PM
புதுச்சேரி : புதுச்சேரி முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடைபெறுவதாக பெற்றோர், மாணவர்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. அரசின் இடங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதாக சேர்க்கை குழு மீது குற்றம் சாட்டினர். மாணவர் சேர்க்கை விவகாரத்தில், புதுச்சேரி மாணவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடு நடந்திருப்பதாகவும் ஆட்சியாளர்கள் மீது கிரண்பேடி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, மாணவர் சேர்க்கையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. இதனை நிரூபிக்க முடியுமா? என சவால் விடுத்தார். ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பதாகவும், அவர் மீது வழக்கு தொடர்வேன் என எச்சரித்தார்.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலாப்பட்டு பொறியியல் கல்லூரியில் உள்ள சென்டாக் அலுவலகத்துக்கு வந்தனர். சென்டாக் கன்வீனர் கோவிந்தராஜ், இணை கன்வீனர் பழனிராஜா, கருணாகரன் உள்ளிட்டோரிடம் ஆவணங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணைக்கு தேவைப்படும் முக்கிய கோப்புகளையும் கைப்பற்றினர். கல்லூரி வாரியாக மொத்தமாக சேர்க்கை ஆணை பெற்றவர்கள் எத்தனை பேர், அரசின் இடங்களில் எந்தெந்த கல்லூரிக்கு எவ்வளவு இடங்கள், அரசின் இடங்களில் சேர்க்கை ஆணை பெற்றவர்கள், மாணவர்களை சேர்க்க மறுத்த கல்லூரிகள் உள்ளிட தகவல்களை கேட்டறிந்தனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 7.15 மணி வரை 8 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. சோதனையை முடித்து வெளியேறிய சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து 2 அட்டை பெட்டிகள் மற்றும் 3 பைகளில் முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றனர். தொடர்ந்து புதுவையிலேயே முகாமிட்டுள்ள சிபிஐ, 2வது நாளாக இன்றும் சென்டாக் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறது. புதுவை தலைமை செயலகத்தில் 2வது நாள் விசாரணையை மேற்கொள்ளும் சிபிஐ அதிகாரிகள், இவ்விவகாரம் தொடர்பாக தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளன. இதுதவிர ஒவ்வொரு தனியார் கல்லூரிக்கும் நேரடியாக சென்று சிபிஐ சோதனை நடத்த தயாராகி வருவதால் அரசு அதிகாரிகள், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கலக்கமடைந்துள்ளன. மேலும் முறைகேடாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் குறித்த விபரங்களையும் சிபிஐ திரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ நடத்திய சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள கவர்னர் கிரண்பேடி, மோசடியில் ஈடுபட்டவர்களின் முகத்திரை கிழியும் என்று குறிப்பிட்டுள்ளார். கிரண்பேடி பரிந்துரையை ஏற்று சிபிஐ புதுவையில் முகாமிட்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.