கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது
6/28/2017 3:58:25 PM
கடலூர் : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குறிஞ்சிகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை (32). இவரது உறவினர் நதியா (22). இருவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. பாவாடை வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், நதியாவுக்கு அருகில் உள்ள எரும்பூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு குறிஞ்சிகொல்லை கிராமத்துக்கு திரும்பிய பாவாடை தனது மனைவி கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தி வருவதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து கடலூரில் மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவி மற்றும் குழந்தையை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மனு கொடுத்தார். தொடர்ந்து சமூகநலத்துறை மூலம் பாவாடையின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் நேற்று கடலூரில் குடும்ப நல நீதிமன்றம் மூலம் இருதரப்பினரையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று பிற்பகல் பாவாடை, நதியா, கள்ளக்காதலன் சுபாஷ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கடலூர் வந்தனர். தனக்கு துரோகம் செய்த மனைவியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாவாடை, நீதிமன்றம் எதிரே வீச்சரிவாளுடன் மறைந்திருந்தார். அப்போது நீதிமன்றத்துக்கு வந்த நதியாவை கண்டதும், ஓடிவந்து சரமாரியாக வெட்டினார். இதனை பார்த்ததும் நதியாவுடன் வந்த சுபாஷின் தாய் மஞ்சுளா (50) தடுக்க வந்தார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த புதுநகர் போலீசார், பாவாடையை கைது செய்தனர். மேலும் சரமாரியாக வெட்டப்பட்ட நதியா மற்றும் மஞ்சுளா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வெட்டப்பட்ட நதியா தற்போது 6 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.