3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை
6/27/2017 4:03:53 PM
ஆவடி : பட்டாபிராமில் வசித்துவரும் மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட 3 நாய்களை கொன்றுவிட்டு இந்த கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர். ஆவடி அருகே பட்டாபிராம் சத்திரம் டீச்சர்ஸ் லேன் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (65). இவர் துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவரது மனைவி சிவகாமி (60). இவர்களுடன் மகன் சதாசிவம், மருமகள் நித்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று காலை வாசுதேவன், சிவகாமி ஆகியோர் ஆழ்வார்திருநகரில் உள்ள உறவினர் வீட்டு சீமந்த நிகழ்ச்சிக்கு சென்றனர். இதன்பிறகு சதாசிவம் வேலைக்கு சென்றார். நித்யா, வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டுக்கு வெளியே ஒரு அட்டைப்பெட்டியில் வைத்துவிட்டு அவரும் சென்றுவிட்டார்.
இந்நிலையில், மாலையில் வாசுதேவன் வீட்டுக்கு வந்து கதவை திறந்து சென்றார். அப்போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. மறைவில் வைத்திருந்த 30 பவுன் நகைகள் கொள்ைளயர்கள் கண்ணில் சிக்கவில்லை. மேலும் வாசுதேவன் வீட்டில் வளர்க்கப்பட்ட 3 நாய்களையும் காணவில்லை. இவற்றை கொள்ளையர்கள் அடித்து கொன்றார்களா, கடத்தி சென்றார்களா என்று தெரியவில்லை. அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்ட சாவியை கவனித்த நபர்கள், அவற்றை எடுத்து கதவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி வாசுதேவன் கொடுத்த புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.