டெல்லியில் ஜூலை முதல் மீண்டும் போராட்டம் : 29 மாநில விவசாய சங்க தலைவர்கள் முடிவு
6/17/2017 6:01:30 PM
திருச்சி: அகில இந்திய விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. தென்மாநில அமைப்பாளர் அய்யாக் கண்ணு, வட மாநில அமைப்பாளர் வி.எம்.சிங் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழகத்தில் இருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் பழனிவேல், துணை தலைவர்கள் கிருஷ்ணன், செந்தில்குமார், மாநில செயலாளர் தினேஷ் மற்றும் 29 மாநிலங்களில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வேளாண் விலை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வரை அனைத்து விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும். தனிநபர் காப்பீடு திட்டம் நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அய்யாக்கண்ணு கூறியதாவது: டெல்லியில் ஏற்கனவே 41நாளாக பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
இந்தியாவில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து 10 பேர் கொண்ட செயற் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு போராட்டம் தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தும். கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தின் போது விவசாயிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதை நினைவு கூரும் வகையில் அச்சம்பவம் நடந்த மந்த் சவுரில் இருந்து ஜூலை 6ம் தேதி விவசாயிகள் குழு தனது பயணத்தை தொடங்குகிறது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன் வைத்து இந்த பயணம் தொடங் குகிறது. இதே போல டெல்லி ஜந்தர்மந்தரில் நடத்திய போராட்டத்துக்கு நியாயம் கிடைக்காததை தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் இதே இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.