ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: சோனியாவுடன் பாஜ குழு சந்திப்பு
6/16/2017 5:11:48 PM
புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக பாஜ குழுவினர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ம் தேதி நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்ய 28ம் தேதி கடைசி நாளாகும். கடந்த 2 நாட்களில் 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பாஜ மற்றும் காங்கிரஸ் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. பாஜ சார்பில் வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து ஜெட்லி, ராஜ்நாத், வெங்கய்யா நாயுடு கொண்ட 3 பேர் குழு கடந்த 12ம் தேதி அமைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. எதிர்கட்சிகள் தங்களது வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதில் ஆளும் மற்றும் எதிர் தரப்பு சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை ஆதரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாஜவின் அறிவிப்புக்கு பிறகு எதிர்கட்சிகள் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசித்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
எதிர்கட்சிகளை பொறுத்த அளவில் மதசார்பற்ற ஒருவரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒரு சமயம் சுஷ்மா போன்றவர்களை பாஜ முன் மொழியும் பட்சத்தில் அதற்கு எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் எதிர்கட்சியுடன் ஆலோசனை நடத்தி பொது வேட்பாளரை நிறுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்திருந்தாக பாஜ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. பாஜ சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ள வெங்கய்யா நாயுடு, ராஜ்நாத் ஆகியோர் சோனியாவை ஜன்பத் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு காலையில் ராஜ்நாத் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அங்கிருந்து 2 பேரும் புறப்பட்டு சோனியாவை சந்திக்க சென்றனர். ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சோனியாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். முன்னதாக கார்கே கூறுகையில், பாஜ குழுவினரின் கருத்துகளை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காங். மேலிடத்துடன் இணைந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். சோனியாவுடனான சந்திப்புக்கு பிறகு 3 பேர் குழு இன்று மாலை சிபிஎம் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரியை சந்தித்து பேசுகின்றனர். ஏற்கனவே பாஜ தரப்பில் என்சிபி தலைவர் சரத்பவார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு ஆகியோரின் ஆதரவையும் பெறுவதற்கான முயற்சியில் பாஜ ஈடுபட்டுள்ளது.