அசாம், மணிப்பூரில் கனமழை: 13 பேர் பலி
6/15/2017 3:47:56 PM
கவுகாத்தி: அசாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பெய்துவரும் கனமழைக்கு 13 பேர் பலியாகினர். வெள்ளம் சூழ்ந்த மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அசாம், மணிப்பூர், மிசோரமில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் அதிகபட்சமாக 105.7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. லக்ஷிபூர், சோனித்பூர், தரான்ஜ், டெமாஜி, கரிம் கஞ்ச் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கனமழையால் மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சாலைகள் அதிகளவில் சேதமடைந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தவிக்கும் மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அசாம் மட்டுமின்றி மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.