மத்திய பிரதேசத்தில் வன்முறை துப்பாக்கி சூட்டில் 6 விவசாயிகள் பலி: முழு அடைப்புக்கு காங். அழைப்பு
6/7/2025 3:57:03 PM
போபால்: மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வெடித்த வன்முறையில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக இச்சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அங்கு மாநிலம் தழுவிய பந்த்க்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மந்த்சார் பகுதியில் நேற்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. சாலையில் இருந்த வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறையை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இந்த வன்முறையில் விவசாயிகள் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடலில் குண்டு காயங்கள் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், போலீஸ் தரப்பில் துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் எஸ்.கே.சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். வன்முறையை தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில், இணையதள சேவை முடக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்த பிறகே அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். ‘‘வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும். விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறான பாதையில் அழைத்து செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். ஆளும் பாஜ அரசு விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.