கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் கோட்டை முற்றுகை போராட்டம்: விவசாய சங்கங்கள் முடிவு
6/6/2025 4:01:41 PM
தஞ்சை: தஞ்சை பனகல் கட்டிடம் அருகே தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடந்த 1ம் தேதி துவங்கி நேற்று வரை 5 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடந்த போராட்டத்தில் நேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடி ரங்கநாதன், தமாகா விவசாயிகள் அணி தலைவர் புலியூர் நாகராஜன் உள்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். போராட்ட முடிவில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்க மறுக்கிறது. பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் பயனில்லாமல் உள்ளது. விவசாயிகளின் நிலத்தை பாழ்படுத்தும் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் தமிழகத்தில் செயல்படுத்துகிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. விவசாயிகளுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது.
வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, காவிரி பிரச்னைக்கு தீர்வு, விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை உள்ளிட்ட அறிவிப்புகள் வராவிட்டால் சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டம் நடைபெறும் தினத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டி கோட்டையை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம். விவசாயிகளின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் விவசாய நிலத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளை போலீசை கொண்டு அடக்கி அவர்களது சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுகிறது. வரும் ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றி போராட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.